Saturday, 27 January 2018

புலனொடுக்க தியானம்



இந்த உலகத்தில் தாயின் கருவறையில் பத்துமாத காலம் ஈசனின் கருணையினால் கருவாய் உதித்து உடம்பு வளர்ந்து இவ்வுலகினில் பிறக்கின்றான். இந்த உடம்பில் ஈசன் இருப்பதை உணராமல், தன்னுள் உள்ள தீயைக் கொண்டு ஈசனை அடையாமல், காமத்தின் வழியில் சென்று அற்புதமான இந்த உடலை இழக்கின்றான். இந்த உயர்ந்த மானுட பிறவியின் அற்புதத்தை உணராமல் நீராக நின்ற வாலையான உயிர்போய் மண்ணாகிறான்.
நம்முடம்பில் சூரிய, சந்திர, அக்னி என மூன்று மண்டலங்கள் உள்ளன. காற்று என்கிற பிராணன், மண் என்கிற உடம்பு, நீர் என்கிற இரத்தம், நெருப்பு என்கிற உஷ்ணம், ஆகாயம் என்கிற சிந்தை இவற்றைப் பற்றி அறியாமலே அநியாயமாக இவ்வுலக கலிமாயையில் ஆழ்ந்து இறந்து போகிறோம். இதை அறிய சித்தர்கள் துணை தேவை.
தன்னை அறிய முற்பட்டால் தானே வருவார் சித்தர். முதலில் தன்னைப் பற்றியும், தன்னைப் படைத்தவனைப் பற்றியும், தன்னைப் படைத்த காரணத்தைப் பற்றியும் தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது அமைதியாக தியானத்தில் அமர்ந்து சிந்திக்க வேண்டும். முதலில் ஐந்து நிமிடம் பழகி நாளாக நாளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அமரலாம். ஆனால் கஷ்டமாக இருந்தாலும் முதலில் ஆர்ப்பரித்த மனது, நாளாக நாளாக தானாகவே புலனொடுக்கம் ஆகும். புலனொடுக்க சுகம் ஒரு மணி நேர தியனத்தில் ஒரு சில நிமிடங்களே கிடைத்தாலும் அந்த சுகத்தை உணர்ந்துவிட்டால் தியானம் உங்களை பிடித்துக் கொள்ளும்.
உங்களுடைய கேள்விகளுக்கு அங்கே விடை கிடைக்கும். இந்த ஆகாயத்தில் வெட்டவெளியில் இருந்து உங்களுடைய கேள்விகளுக்கு, புலனொடுக்க நேரத்தில் விடை கிடைக்கும். பெரிய பெரிய அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யும்பொழுது மனம் ஒன்றிய நேரத்தில் ஆகாயத்தில் இருந்து கிடைத்ததுதான் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள். அவ்வளவு சிக்கலான விஞ்ஞான கண்டுபிடிப்புகளே ஆகாயத்தில் கிடைக்கும்பொழுது, தான் பிறந்த காரணத்தை, இந்த மனித தேகத்தை அறிய சித்தர்களை எண்ணி பூஜித்து, புலனொடுக்க தியானத்தில் இருந்தோமானால் நமக்கும் அருள் செய்வார்கள். அந்த விடை கிடைத்து வாழும் வாழ்க்கையே பிறவியின் பெரும் பேறாகும்.
இந்த தியானத்திற்கு தேவை அமைதியான அறை, நறுமணமுள்ள சூழ்நிலை, நிசப்தம், ஒரு தீபம், சித்தர்களை மனதார பூஜித்தல். குறிப்பாக ஈ, எறும்பு, கொசு இருக்கக் கூடாது. நீங்களாக எழுந்திரிக்கும் வரை, யாரும் உங்களை தியானத்தில் இருந்து எழுந்திரிக்க சொல்லக் கூடாது.
முதலில் மனம் ஒன்றாவிட்டாலும் பரவாயில்லை. முடிந்தவரை அமர்ந்து இவ்வுடலை பழக்கப்படுத்துங்கள். அறிவு சரியென்று சொன்னாலும், புலன் வழியே வெளியே செல்ல துடிக்கும் மனது உங்களை தியானத்தில் அமரவிடாது. அமர்ந்து புலனொடுக்க சுகத்தை கண்டுவிட்டால், அப்புறம் விடமாட்டீர்கள்.

No comments:

Post a Comment