Saturday, 27 January 2018

ஜீவகாருண்யம்


பசியை நீக்கித் திருப்தி இன்பத்தை உண்டாக்குகின்ற ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழ வேண்டும். ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.
- மகான் இராமலிங்க சுவாமிகள் - ஜீவகாருண்ய ஒழுக்கம்.
ஆகவே ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவை வேண்டா.
இவைகள் இல்லாமலே எக்காலத்தும் அழியாத இன்ப வீட்டை அடைய முடியும்.
இப்போது நாம் கொண்டு வந்திருக்கும் தேகமென்னும் வீடு அழிகின்ற தன்மை கொண்டது. பிறருக்கு பசியாற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து ஜீவகாருண்யமென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலை இளமை காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்டால் மோட்ச வீட்டை ஜீவகாருண்யமென்கிற திறவு கோலை கொண்டு திறந்து நித்திய முத்தராய் வாழலாம் என்கிறார்.
ஆகவே யோகம் தேவையில்லை, சரியை தேவையில்லை, கிரியை தேவையில்லை, ஞானம் தேவையில்லை. ஒன்றே ஒன்று பசியாற்றுவித்தலே, அது போதும். வேறெதுவும் வேண்டா.
ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு எல்லா உயிர்களையும் தன் சகோதர உயிர்களாக எண்ணி அந்த உயிர்களிடத்து அன்பு செலுத்தி கூடுமானவரை அவ்வுயிரின் துன்பங்களை போக்கவல்லவரே மோட்ச வீட்டுக்கு செல்ல தகுதியானவர்.

No comments:

Post a Comment