Saturday, 6 August 2016

ஆன்மா

நாள் என ஒன்று போல் காட்டி உயி்ர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
வாழ்வில் குடும்பத்திற்காக நாளும் நாளும் உழைத்து உழைத்து அதன் மயக்கத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து பின் மாய்ந்து விடுகிறான் மனிதன். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு காலன் எனும் எமன் நாள் என்ற வாளால் உயிரை தினம்தினம் அறுத்து அறுத்து இறுதியில் கொன்றே விடுகிறான். அப்படிப்பட்ட நாள் எனும் வாள் கொண்ட எமனை அறிய முற்படவில்லை. இறுதியில் அநியாயமாக ஆன்மாவிற்கென மறுமைக்கு ஒன்றும் செய்து கொள்ளாமல் இறக்கும்போது கூட அறியவில்லை. மனைவிமக்களை விட்டு விட்டு இறக்கிறோமே என்ற கவலைதானே ஒழிய மறுமைமைய எண்ணவில்லை.

நாள் என்ற வாளை கொண்ட எமனை நாம் உணர்ந்தோமானால், அதிலிருந்து விடுபட என்றும் அழியாத அறத்தை செய்து கொள்ள வேண்டும், என்றும் நிலைத்து நிற்கும் இறைவனை வணங்கி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். நிலையில்லாத பொருளைக் கொண்டு நிலையானதை செய்து கொள்ள வேண்டும்.

கல்வி

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

நாம் எந்த வகையான உயர்ந்த கல்வியை கற்றிருந்தாலும் அது இம்மைக்கு உதவுமே அன்றி மறுமைக்கு உதவாது. அதாவது நாம் இறந்து விட்டால் மீண்டும் ஒன்றாம் வகுப்பிலிருந்தே படித்தாக வேண்டும், விட்ட இடத்திலிருந்து தொடர முடியாது. இந்த கல்வி பொருளீட்ட மட்டுமே பயன்படும், தொடர்ந்து வரும் பிறவிப்பிணிக்கு மருந்தாகாது.
ஆனால் தூய்மையான மென்மையான நறுமணமுள்ள இறைவனுடைய திருவடியை தொழுது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் அடைவோம். அப்படி தொழா விட்டால் என்ன கல்வி கற்றிருந்தாலும், அந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.
கல்வியைக் கொண்டு பொருளை ஈட்டுவோம். பொருளைக் கொண்டு என்றும் அழியாத அறத்தை செய்து ஆன்மாவிற்கு மறுமையிலும் இன்பம் தரும் ஆக்கத்தை தேடுவோம்.